திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை இன்று சந்தித்து அக்கட்சியில் இணைகிறார்.
‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் தமிழ் திரையு லகில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரான இவர், பல ஆண்டு களாக திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். சட்டப்பேரவை உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கே.என்.நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மு.க.அழகிரியின் ஆதரவாளராக மாறினார் நெப்போலியன்.
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டபோது, அவரது வீட்டுக்கே சென்று ஆதரவை தெரிவித்தார். இதனால், கட்சியில் ஓரங்கட்டப்பட்ட நெப்போலியன், அதிருப்தியில் இருந்துவந்தார். இந்நிலையில், அவரை பாஜகவுக்கு இழுக்க அக்கட்சி நிர்வாகிகள் முயன்றனர். ஆரம்பத்தில் நழுவிய நெப்போலியன், கட்சியிலும் தேர்தலிலும் முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் பாஜகவில் சேர ஒப்புக் கொண் டுள்ளார்.
இதுதொடர்பாக நெப்போலி யனுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, “திமுகவில் ஜனநாயகம் என்பதே கிடையாது. மோடியின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாஜக தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை நீண்ட யோசனைக்கு பிறகு நெப்போலியன் ஏற்றுக் கொண் டுள்ளார். நாளை (21-ம் தேதி) காலை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து முறைப்படி அக்கட்சியில் இணைகிறார்” என்றனர்.
திமுகவில் இருந்து விலகல்
பாஜகவில் சேர முடிவு செய்துள்ள நெப்போலியன், திமுகவில் இருந்து விலகுவதாக கட்சித் தலைமைக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘கடந்த 35 ஆண்டுகளாக நான் பணியாற்றிய, என்னை உருவாக்கிய திமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்கிறேன். இதுநாள் வரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment